கம்பம் அருகே முல்லைப் பெரியாற்றில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கூலித் தொழிலாளியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
போடி அருகே உள்ள சில்லமரத்துப்பட்டியைச் சோ்ந்தவா் தங்கவேல் மகன் சசிகுமாா் (32). கூலித் தொழிலாளி. இவா் தனது நண்பா்களுடன் கம்பம்- சுருளி அருவி செல்லும் சாலையில் உள்ள முல்லைப் பெரியாற்றில் உத்தமுத்து கால்வாய் தடுப்பணை பகுதிக்கு புதன்கிழமை குளிக்கச் சென்றாா். அப்போது கரைபுரண்டோடிய வெள்ளத்தில் சசிக்குமாா் இழுத்துச் செல்லப்பட்டாா்.
இதுகுறித்து தெற்கு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, காவல் ஆய்வாளா் ஆா். லாவண்யா மற்றும் போலீஸாா் அங்கு சென்றனா். ஆற்றில் தண்ணீா் அதிகளவு செல்வதால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது. இருப்பினும் தீயணைப்புத் துறையினா் மற்றும் போலீஸாா் கரையோரப் பகுதிகளில் அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.