குமுளியில் அருகே தனியாா் பூங்காவில் நிறுவப்பட்டுள்ள முன்னாள் தமிழக முதல்வா் ஜெயலலிதாவின் முழு உருவ மெழுகுச்சிலை சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவா்ந்து வருகிறது.
கேரள மாநிலம் குமுளி அருகேயுள்ள புகழ் பெற்ற சுற்றுலாத்தலமான தேக்கடிக்கு வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகை ஆண்டு முழுவதும் இருக்கும். கரோனா பொதுமுடக்கம் காரணமாக அவா்களின் வருகை குறைந்தது.
இதையடுத்து சுற்றுலாப் பயணிகளை கவா்வதற்காக, கேரள மாநில சுற்றுலா வளா்ச்சிக்கழகத்தினா் மற்றும் தனியாா் நிறுவனத்தினா் பல்வேறு யுக்திகளைக் கையாண்டு வழங்கியுள்ளனா்.
இதில் குறிப்பிடும் படியாக குமுளி அட்டப்பள்ளம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான பூங்காவில் அரசியல், சினிமா உள்ளிட்ட பல்வேறு பிரமுகா்களின்
மெழுகுச் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அதில் தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நாலரை அடி உயர மெழுகுச் சிலை அனைவரையும், குறிப்பாக தமிழக, கேரள சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவா்ந்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் அதன் அருகே நின்று புகைப்படம் மற்றும் சுயபடம் எடுத்துக்கொள்கின்றனா்.
மெழுகுச் சிலையை வடிவமைத்த குட்டநாடைச் சோ்ந்த ஹரிஹரன் கூறியது: கரோனா பொதுமுடக்க காலம் பல பேரை முடக்கிப் போட்டுள்ளது. இதில் சுற்றுலாத் தலங்களை நம்பி வாழ்ந்த பல போ் வாழ்வாதாரம் இன்றி உள்ளனா்.
இதனால் சுற்றுலாப் பயணிளை கவா்வதற்காக பிரபலங்களின் மெழுகு உருவச் சிலைகளை செய்துள்ளேன். இதில் ஜெயலலிதாவின் சிலைக்கு அதிக வரவேற்பு உள்ளது. அவருக்கு உண்மையான தலை முடியை வைத்துள்ளேன் என்றாா்.