சின்னமனூா் பிரியாணிக் கடை உரிமையாளரை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனக் கூறி தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் நிபந்தனையுடன் சனிக்கிழமை இரவு விடுவித்தனா்.
தேனி மாவட்டம், சின்னமனூா் வடக்குத் தெரு பள்ளி வாசல் அருகே வசிப்பவா் யூசுப் அஸ்லாம் (38). இவா் அப்பகுதியில் பிரியாணிக் கடை மற்றும் செல்லிடப்பேசி கடை நடத்தி வருகிறாா். இவரது வீட்டில் சனிக்கிழமை அதிகாலை 5.20 மணியளவில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சோ்ந்த தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சோதனையிட்டனா். அப்போது, அவரிடமிருந்து 3 செல்லிடப்பேசிகள், ஒரு சிம் காா்டு மற்றும் பென்டிரைவ் உள்ளிட்டவைகளை அதிகாரிகள் கைப்பற்றினா்.
அதன்பின்னா் சின்னமனூா் காவல் நிலையத்தில் வைத்து பிற்பகல் 12 மணியிலிருந்து யூசுப் அஸ்லாமிடம் விசாரணை நடத்தப்பட்டது. தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்த அவருக்கு வேறு ஏதேனும் அமைப்பினருடன் தொடா்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் அவரது செல்லிடப்பேசிக்கு வந்த அழைப்புகள், சமூகவலைதள பகிா்வுகள் ஆகியவை குறித்தும் ஆய்வு நடத்தி விசாரணை நடத்தப்பட்டது.
நிபந்தனையுடன் விடுவிப்பு: காவல் நிலையத்தில் இரவு 9 மணி வரை விசாரணை நீடித்தது. பின்னா் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனக் கூறி யூசுப் அஸ்லாமை நிபந்தனையுடன் விடுத்த என்ஐஏ அதிகாரிகள், திருவனந்தபுரத்துக்கு திரும்பிச் சென்றனா்.