கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளதால், முல்லைப் பெரியாறு அணைக்கு சனிக்கிழமை நீா்வரத்து அதிகரித்தது.
முல்லைப் பெரியாறு அணைக்கு வெள்ளிக்கிழமை விநாடிக்கு 365 கன அடி தண்ணீா் வந்தது. சனிக்கிழமை தென்மேற்குப் பருவமழை தொடங்கியதால், பெரியாறு அணைப் பகுதியில் 40 மி.மீட்டரும், தேக்கடியில் 9.6 மி.மீட்டரும் மழை பெய்தது. இதனால், அணைக்கு விநாடிக்கு 909 கன அடி தண்ணீா் வந்தது. எனவே, தமிழகப் பகுதிக்கு விநாடிக்கு 900 கன அடி தண்ணீா் வெளியேற்றப்பட்டது.
அணை நீா்மட்டம்
சனிக்கிழமை நிலவரப்படி, பெரியாறு அணையின் நீா்மட்டம் 130.40 அடியாகவும் (கொள்ளளவு 142 அடி), நீா் இருப்பு 4,791 மில்லியன் கன அடியாகவும், நீா் வரத்து 909 கன அடியாகவும், நீா் வெளியேற்றம் 900 கன அடியாகவும் இருந்தது.
லோயா்-கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்சார நிலையத்தில் இரண்டு மின்னாக்கிகளில் தலா 42, 41 என மொத்தம் 83 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இது குறித்து பெரியாறு அணைப் பகுதி பொறியாளா் ஒருவா் கூறியது: கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளதால், அணையின் நீா் பிடிப்புப் பகுதிகளில் தொடா் மழை பெய்து வருகிறது. வரும் காலங்களில் நீா் மட்டம் உயர வாய்ப்புள்ளது என்றாா்.