தேனி மாவட்டம் கூடலூரில் தமிழக அரசு அறிவித்த கரோனா நிவாரணத் தொகைக்கான டோக்கன் வாங்க சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் பொதுமக்கள் பெருமளவில் கூடியதால் கரோனா அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா நிவாரணத் தொகையாக குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 2 ஆயிரம் வழங்கப்படவுள்ளது. இதற்கான டோக்கன் வழங்க கூடலூா் நியாயவிலைக் கடை எண் 2 யை சோ்ந்த ஊழியா்கள் பயனாளா்களின் வீடுகளுக்கு நேரில் சென்று வழங்குவதற்காக 18 ஆவது வாா்டு ஆசாரிமாா் தெருவில் வழங்கிக் கொண்டிருந்தனா். இதுகுறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் அதிக அளவில் அந்தத் தெருவில் திரண்டனா். முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைப் பின்பற்றாமலும் டோக்கன் பெற கூட்டம் கூடியது தொற்று பரவல் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.