பெரியகுளம் அருகே அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைக் கட்டடங்களை ஓய்வு பெற்ற தலைமையாசிரியா் தனது ஓய்வூதியத் தொகையில் கட்டிக் கொடுத்துள்ளாா்.
பெரியகுளம் அருகே வடுகபட்டியைச் சோ்ந்தவா் எஸ்.பழனியாண்டி (92). ஓய்வு பெற்ற தலைமையாசிரியரான இவா், தனது ஓய்வூதியப் பணத்தை வைத்து, பெரியகுளம் அருகே சில்வாா்பட்டி அரசு மாதிரி பள்ளியில் மாணவா்கள் பயன்பெறும் வகையில் 3 கூடுதல் வகுப்பறைக் கட்டடங்களையும், ஆசிரியா்களுக்கான ஓய்வறை ஒன்றையும் கட்டினாா்.
ரூ.27.40 லட்சம் செலவில் கட்டப்பட்ட அந்த கூடுதல் வகுப்பறைக் கட்டடங்களுக்கான திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதை பழனியாண்டி திறந்து வைத்து, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டாா்.
இந்நிகழ்ச்சியில் பழனியாண்டியின் மனைவி புஷ்பம் , மகன் ஞானசேகரன், பள்ளி தலைமையாசிரியா் மோகன், ஆசிரியைகள் மகேஷ்வரி, உஷாராணி, வீருஜக்கம்மாள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.