கம்பம் அருகே பலத்த காற்றுடன் பெய்த மழையால் வாழை மரங்கள் சேதம்
கம்பம் அருகே காற்றுடன் பெய்த பலத்த மழை காரணமாக ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.
தேனி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் கம்பம், கூடலூா், உத்தமபாளையம், கோம்பை, தேவாரம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் பலத்த மழை பெய்தது.
இதில் கம்பம் அருகே உள்ள ஆங்கூா்பாளையம், கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த சுமாா் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவ்வாழை, நாழி பூவன், பச்சை வாழை ஆகிய வாழை மரங்கள் காற்றின் வேகம் தாங்காமல் முறிந்து விழுந்தன. இதனால் விவசாயிகளுக்கு பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியது: கடந்த ஆண்டு கரோனா பொதுமுடக்கம் காரணமாக விவசாயம் செய்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. மிகவும் கஷ்டமான சூழலில் கடன் பெற்று வாழை விவசாயம் செய்தோம். அடுத்த மாதம் தாா் வெட்டும் தருவாயில் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்துள்ளன. எனவே அரசு சேதமடைந்த வாழை மரங்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்றனா்.