கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவியை காவல்துறையினர் இன்று (சனிக்கிழமை) கைது செய்தனர்.
தேனி மாவட்டம் குள்ளப்பகவுண்டன்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளித்தெருவைச் சேர்ந்த ஆண்டவர் மகன் அருண்குமார்(37). இவரது மனைவி வைஷ்ணவி(25), இவர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று கனிஷ்கா(7) என்ற மகள் உள்ளார். அருண்குமார் கம்பத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் காசாளராக வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதை பார்த்த அருகில் உள்ளவர்கள் வந்து பார்த்த போது, அருண்குமார் படுக்கையிலேயே இறந்து கிடந்தது தெரிய வந்தது. இது பற்றி கூடலூர் தெற்கு காவல் நிலைய காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
காவல் ஆய்வாளர் ஜேம்ஸ் ஜெயராஜ் தலைமையில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது இதே ஊரைச் சேர்ந்த குபேந்திரன் மகன் ஜெயச்சந்திரன்(26) என்பவருக்கும் வைஷ்ணவிக்கும் தகாதா உறவு இருந்தது தெரியவந்தது. இது பற்றி கணவர் அருண்குமாருக்கு தெரிந்து கண்டித்துள்ளார். இதனால் நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வைஷ்ணவி ஜெயச்சந்திரனை, செல்லிடப்பேசியில் அழைத்துள்ளார். இருவரும் அருண்குமாரை தாக்கியுள்ளதால் அருண்குமார் இறந்து விடவே, ஜெயச்சந்திரன் அங்கிருந்து வெளியே ஓடிவிட்டார். வைஷ்ணவி வெளியூரில் இருந்த தனது பெற்றோரை அழைக்கவே அவர்கள் வந்து வைஷ்ணவி மற்றும் அவரது மகளை அழைத்துச் சென்றுயுள்ளனர்.
இந்நிலையில் காவல்துறையினர் வைஷ்ணவி மற்றும் ஜெயச்சந்திரனை இன்று (சனிக்கிழமை) கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் குள்ளப்பகவுண்டன்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.