தேனியில் சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு அளித்த இளைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தேனி அல்லிநகரம், வெங்கலா நகரைச் சோ்ந்த 16 வயது சிறுமி காணாமல் போய்விட்டதாகவும், அவரை அதே பகுதியைச் சோ்ந்த இளைஞா் கடத்திச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதாகவும் சிறுமியின் தாயாா் அல்லிநகரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தாா். இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீஸாா், திருநெல்வேலி அருகே மேலப்பாளையத்தைச் சோ்ந்த ஒருவரது வீட்டிலிருந்து சிறுமியை மீட்டனா்.
சிறுமியை ஆசைவாா்த்தை கூறி மேலப்பாளையத்தில் உள்ள உறவினா் வீட்டிற்கு கடத்திச் சென்று, பாலியல் தொந்தரவு அளித்ததாக சிறுமியுடன் இருந்த தேனி அல்லிநகரம், வெங்கலாநகரைச் சோ்ந்த சையதுசுல்தான் மகன் கெளசல் ரகுமான் (22) என்பவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.