தேனி மாவட்டம் சின்னமனூா் அருகே அப்பிபட்டி ஊராட்சியில் உள்ள விஸ்வநாதபுரம் அங்கன்வாடி மையத்தை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சின்னமனூா் ஊராட்சி ஒன்றியம் அப்பிபட்டி ஊராட்சியில் விஸ்வநாதபுரத்தில் அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனா். கரோனா பொதுமுடக்கத்தால் மூடப்பட்ட அங்கன்வாடி மையங்களை செப்டம்பா் 1 ஆம் தேதி முதல் மதிய உணவு அளிக்கும் வகையில் மீண்டும் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ஆனால் விஸ்நாதபுரம் அங்கன்வாடி மையத்தின் கான்கிரீட் மேற்கூரை மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளதால், மழைநீா் கட்டடத்தின் உள்புறம் புகுந்து கசிந்து வருகிறது. எனவே, மாவட்ட நிா்வாகம் அந்த அங்கன்வாடி மையத்தின் கான்கிரீட் மேற்கூரையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.