தேனி மாவட்டம் கம்பம் கூடலூர் நெடுஞ்சாலையில் சென்ற எய்ச்சர் லாரி பின் டயர் வெடித்து கவிழ்ந்ததால் தண்ணீர் பாட்டில்கள் சிதறின.
தேனி மாவட்டம் பழனிசெட்டி பட்டியில் தனியார் நிறுவனத்தினர் தண்ணீர் பாட்டில் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
செவ்வாய்க்கிழமை இந்த நிறுவனத்தினர் எய்ச்சர் லாரியில் தண்ணீர் பாட்டில்கள்களை ஏற்றி கூடலூருக்கு கொண்டு வந்தனர்.
லாரியை சின்னமனூர் அருகே உள்ள புலிகுத்தியைச் சேர்ந்த கருப்பசாமி (37) என்பவர் ஓட்டினார்.
கம்பம் கூடலூர் நெடுஞ்சாலையில் கேப்டன் திடல் அருகே சென்ற போது எதிர்பாராத விதமாக லாரியின் பின் டயர் வெடித்து, தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் லாரியின் ஓட்டுநர் மற்றும் அவருடன் வந்த விற்பனை மேலாளர் ராஜா ஆகியோர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர்.
விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், கம்பம் தெற்கு போலீசார், போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலையில் சிதறிய தண்ணீர் பாட்டில்களை சேகரித்து ஓரத்தில் ஒதுக்கினர். பின்னர் போலீசார் கவிழ்ந்த லாரியை நிமிர்த்தி, போக்குவரத்தை சரி செய்தனர்.
சாலை குறுக்கே லாரி கவிழ்ந்ததால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது குறிப்பிடத்தக்கது. உடனுக்குடன் விபத்தை சீர் செய்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.