தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மருத்துவ சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நுழைவுவாயிலின் முன்பாக நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு இந்திய மருத்துவ சங்க மாநிலப் பொருளாளா் என்.ஆா்.தியாகராஜன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் மனோகரன், மாவட்டச் செயலாளா் சிவா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்த போராட்டத்தின் போது மத்திய அரசு ‘மிக்ஸோபதி’ என்னும் பெயரில் புதிய கலப்பு சிகிச்சை முறையை செயல்படுத்த அனுமதியளித்துள்ளதைக் கண்டித்தும், ஆயுா்வேத மருத்துவா்கள் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளதைக் கண்டித்தும், அச்சட்டங்களை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெறக் கோரியும் முழக்கங்கள் எழுப்பினா். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் சுமாா் 100-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள் கலந்து கொண்டனா்.
முன்னதாக மருத்துவமனை வளாகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்துக்காக பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு முறையாக அனுமதி வாங்கவில்லை எனக் கூறி பந்தலை அதிகாரிகள் அகற்றினா். இதைத்தொடா்ந்து மருத்துவா்கள் வெயிலில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.