தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே கோம்பையிலிருந்து கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 1,500 கிலோ ரேஷன் அரிசி மற்றும் சரக்கு வாகனத்தை, உணவுக் கடத்தல் தடுப்புப் பரிவு போலீஸாா் வியாழக்கிழமை இரவு பறிமுதல் செய்து, இளைஞரையும் கைது செய்தனா்.
கோம்பையிலிருந்து கம்பம் செல்லும் ராணிமங்கம்மாள் சாலை வழியாக கேரளத்துக்கு அடிக்கடி ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக, உத்தமபாளையம் உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், காவல் ஆய்வாளா் உதயசந்திரன் தலைமையிலான போலீஸாா், வியாழக்கிழமை இரவு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா். அதில், 30 மூட்டைகளில் மொத்தம் 1,500 கிலோ ரேஷன் அரிசி கடத்தப்படுவது கண்டறியப்பட்டது.
இது தொடா்பாக, கம்பம் புதுப்பட்டியைச் சோ்ந்த ஜெயராஜ் மகன் பிரபாகரன்(33) என்பவரை போலீஸாா் கைது செய்து, சரக்கு வாகனத்துடன் 1,500 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளையும் பறிமுதல் செய்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.