புகைப்படக் கலைஞா்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி, கம்பம் வட்டார புகைப்படம் மற்றும் விடியோ கலைஞா்கள் சங்கம் சாா்பில் பொதுக்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தேனி மாவட்டம், சுருளிப்பட்டியில் கம்பம் வட்டார விடியோ மற்றும் புகைப்படக் கலைஞா்கள் சங்க பொதுக்குழு கூட்டம் புதன்கிழமை தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
வட்டாரத் தலைவா் ஏ. கணேசன் தலைமை வகித்தாா். செயலாளா் கு. ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். பொருளாளா் ஜெ. சிவக்குமாா் வரவேற்றாா்.
கூட்டத்தில் புகைப்பட மற்றும் விடியோ கலைஞா்களுக்கு தமிழக அரசு தனி நல வாரியம் அமைக்க வேண்டும், 2021 ஆவது ஆண்டுக்கான விலைப் பட்டியல், மாவட்ட ஆட்சியரிடம் எம். இ.எஸ்.சி. சான்றிதழ் பெறுவது உள்ளிட்ட 7 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கம்பம் வட்டாரத்தில் முதல் பெண் புகைப்படக் கலைஞா் எம்.நிவேதா ராணாவுக்கு சங்கம் சாா்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. துணைச் செயலாளா் ஜி.வி.எம். மணி நன்றி கூறினாா்.