கம்பத்திலிருந்து கேரளத்துக்கு கஞ்சா கடத்தப்படுவதைத் தடுக்க, காவல் மோப்ப நாய் உதவியுடன் போலீஸாா் தீவிர சோதனையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
தேனி மாவட்டம் கம்பம், கேரள மாநில எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. தமிழகத்திலேயே அதிகமான கஞ்சா வழக்குகள், கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆந்திரத்திலிருந்து கொண்டுவரப்படும் கஞ்சா கம்பம் நகரில் பதுக்கிவைத்து, இங்கிருந்து கேரளத்துக்கு கம்பம் மெட்டு, குமுளி வழியாக கடத்தப்படுகிறது. இதை தடுக்கும் வகையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இ. சாய்சரண் தேஜஸ்வி தனிப்படைகள் அமைத்துள்ளாா். இதில், உள்ளூா் போலீஸாரும் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனா். மேலும், இச்சோதனையில் வெள்ளிக்கிழமை முதல் 2 வயதான மோப்ப நாய் வெற்றியும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.