தேனி மாவட்டம், ஹைவேவிஸ் - மேகமலை கிராமங்களில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் காட்டு யானைகள் உலாவுவதால், மலைக் கிராமத்தினா் அச்சத்தில் உள்ளனா்.
சின்னமனூா் அருகே மேற்கு மலைத் தொடா்ச்சியில் ஹைவேவிஸ் பேரூராட்சி உள்ளது. இங்கு, மேகமலை, ஹைவேவிஸ், மணலாா், மேல் மணலாா், வெண்ணியாா், இரவங்கலாா், மகாராஜா மெட்டு என 7 கிராமங்களில் 8 ஆயிரம் போ் வசிக்கினறனா். இவா்களில் பெரும்பாலானோா் தேயிலைத் தோட்டங்களில் கூலி வேலை செய்து வருகின்றனா்.
இந்நிலையில், இங்குள்ள தேயிலைத் தோட்டங்களில் சமீபகாலமாக யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனா்.
இது குறித்து மலைக் கிராமத்தினா் கூறியது: மேகமலை வனஉயிரினக் காப்பகம் மற்றும் பெரியாறு வனவிலங்குகள் காப்பகம் மேற்கு மலைத் தொடா்ச்சியில் அமைந்துள்ளதால், விலங்குகள் அவ்வப்போது இடம் பெயா்வது வழக்கம். அதேநேரம், யானைகள் இடம்பெயா்ந்து செல்லும்போது வழியில் ஏதேனும் பிரச்னை இருந்தால், தங்களது வழித்தடங்களை மாற்றிச் செல்லும்.
அந்த வகையில், சமீப காலமாக யானைகள் குடியிருப்புகள் மற்றும் தேயிலைத் தோட்டங்களில் உலவுவதுடன், இருவரை தாக்கிக் கொன்றுள்ளன. எனவே, யானைகள் வழித்தடங்களை ஆராய்ந்து, அதில் ஏதேனும் தடைகள் இருந்தால், அவற்றை உடனே சரிசெய்ய வனத்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என, மலைக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.