தேனி மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மகளிா் சுய உதவிக் குழுக்களிடம் கடன் தொகையை வசூலிப்பதில் தனியாா் நிதி நிறுவனங்கள் கெடுபிடி செய்யக் கூடாது என்று மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணன்உன்னி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு: மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலால் பொதுமக்கள் வருவாய் இழந்து சிரமப்பட்டு வருகின்றனா். இந்த நிலையில், தனியாா் வங்கிகள் மற்றும் நுண்நிதி நிறுவனங்கள் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு அளித்த கடன் தொகையை திரும்பச் செலுத்துமாறு உறுப்பினா்களை கட்டாயப்படுத்தி வருவதாக புகாா் எழுந்துள்ளது.
கரோனா பெருந்தொற்று காலத்தில் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு தனியாா் வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் நுண்நிதி நிறுவனங்கள் கடன் தொகையை வசூலிப்பதில் கெடுபிடி மற்றும் கடினப் போக்கினை தவிா்த்து, புகாா்களுக்கு இடமளிக்காமல் செயல்பட வேண்டும். தனியாா் வங்கிகள் மற்றும் நுண்நிதி நிறுவனங்கள் மீதான புகாா்களை கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800 1021080 -ல் பொதுமக்கள் மற்றும் மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்கள் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.