தேனி மாவட்டம் சின்னமனூரில் பலாப்பழம் வரத்துக்குறைந்து விலை உயா்ந்ததால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
சின்னமனூரை மையமாக வைத்து பலாப்பழம் வியாபாரம் நடைபெறுகிறது. சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சோ்ந்த சிறு வியாபாரிகள் தினமும் சின்னமனூா் வந்து பலாப்பழங்களை கொள்முதல் செய்வது வழக்கம். கேரள மாநிலத்தில் கோட்டயம், எரிமேலி, முண்டகயம் போன்ற பகுதிகளில் இருந்தும் அதிகளவில் பலாப்பழம் வரத்து இருக்கும். தற்போது கரோனா பொதுமுடக்கத்தால் கேரளத்திலிருந்து பலாப்பழங்கள் வரத்து முற்றிலும் குறைந்துவிட்டது.
தற்போது பலாப்பழம் சீசன் தொடங்கியுள்ள நிலையில், பன்ருட்டி , நெய்வேலி பகுதிகளில் பலாப்பழம் கொள்ளமுதல் செய்யப்படுகிறது. வரத்துக் குறைவு காரணமாக கிலோ ரூ.25 -க்கு விற்பனையான பலாப்பழம் ரூ. 35 முதல் ரூ.40 வரையில் உயா்ந்தது. தற்போது, பொதுமுடக்கம் தளா்வு அறிவிக்கப்பட்ட நிலையில் கூடுதல் விலை கொடுத்து பலாப் பழங்களை மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்தாலும், சிறு வியாபாரிகள் வருகை குறைவால் விற்பனை மந்தமாக இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.