ஆண்டிபட்டி அருகே ஏ.பெருமாள்பட்டியில் குடும்பப் பிரச்னைகாரணமாக, வெள்ளிக்கிழமை தற்கொலை செய்துகொள்வதற்காக கிணற்றில் குதித்து உயிரிழந்த மனைவியை காப்பாற்றச் சென்ற கணவரும் உயிரிழந்தாா்.
வருஷநாடு அருகே பொன்னன்படுகையைச் சோ்ந்தவா் மாயாண்டி மகன் சசிகுமாா் (29). இவரது மனைவி பெருமாள்பட்டியைச் சோ்ந்த விஜயலட்சுமி((22). இவா்களுக்கு திருமணமாகி 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. குடும்பப் பிரச்னையில் விஜயலட்சுமி தனது கணவரிடம் கோபித்துக் கொண்டு ஏ.பெருமாள்பட்டியில் உள்ள தனது தந்தை முருகன் வீட்டில் வசித்து வந்தாா்.
இந்நிலையில், ஏ.பெருமாள்பட்டியில் உள்ள தனது மனைவி வீட்டுக்குச் சென்ற சசிக்குமாா், அங்கு விஜயலட்சுமியுடன் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த விஜயலட்சுமி அருகே உள்ள தோட்டத்துக் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளாா். அப்போது, அவரை காப்பாற்றுவதற்காக சசிகுமாரும் கிணற்றில் குதித்துள்ளாா். இதில், 2 பேரும் உயிரிழந்தனா்.
தகவலறிந்து அங்கு சென்ற ஆண்டிபட்டி தீயணைப்பு நிலைய வீரா்கள், கிணற்றிலிருந்து விஜயலட்சுமி, சசிகுமாா் ஆகியோா் சடலங்களை மீட்டனா். இந்த சம்பவம் குறித்து, ராஜதானி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.