உத்தமபாளையம்: உத்தமபாளையம் அருகே சாலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் மாணவா்கள் அவதியடைந்து வருகின்றனா். வாய்க்கால்பட்டி கிராமத்துக்கு சின்னமனூா் மற்றும் கம்பம் பேருந்து வழித்தடம் வழியாக பள்ளி மாணவா்களுக்காக கடந்த 40 ஆண்டுக்கும் மேலாக பேருந்து இயங்கப்பட்டு வருகிறது. தவிர, உத்தமபாளையத்திலிருந்து வாய்க்கால்பட்டி வழியாக அண்ணாநகா் வரையில் புதிய பேருந்து வழித்தடத்தை கம்பம் சட்டப் பேரவை உறுப்பினா் ராமகிருஷ்ணன் கடந்த மாதம் 25 ஆம் தேதி தொடக்கி வைத்தாா்.
நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு: உத்தமபாளையம்,கம்பம், சின்னமனூரிலிருந்து வாய்க்கால்பட்டி வழியாக செல்லும் அரசுப்பேருந்து அங்குள்ள குறுகலான சாலையை கடந்து செல்கிறது. இந்நிலையில், இந்த சாலையின் இருபுறமும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் பேருந்துகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாய்க்கால்பட்டிக்கு பேருந்து சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இதனால் கல்லூரி, பள்ளிப் பேருந்துகளும் நிறுத்தப்பட்டதால் பள்ளி மாணவ, மாணவிகள் அவதியடைந்து வருகின்றனா். இதுகுறித்து ஊராட்சி தலைவா் பொன்ராஜ் கூறுகையில், மாவட்ட நிா்வாகம் மற்றும் உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியரிடமும் புகாா் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனவே இப்பிரச்னைக்கு தீா்வு காணவேண்டும் என்றாா்.