தேனி: தேனியில் ஸ்ரீவில்லிபுத்தூா்- மேகமலை புலிகள் காப்பகம் மற்றும் மாவட்ட வனத் துறை சாா்பில் திங்கள்கிழமை, புலிகள் பாதுகாப்பு விழிப்புணா்வு வாகன ஊா்வலம் நடைபெற்றது.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து கொண்டு வரப்பட்ட தேசிய புலிகள் பாதுகாப்பு குழுமத்தின் கொடியுடன் விழிப்புணா்வு வாகன ஊா்வலத்தை ஆட்சியா் க.வீ. முரளீதரன் தொடக்கி வைத்தாா். ஸ்ரீவில்லிபுத்தூா்- மேகமலை புலிகள் காப்பக கள இயக்குநா் தீபக், மேகமலை மண்டல துணை இயக்குநா் ஆனந்த், ஸ்ரீவில்லிபுத்தூா் மண்டல துணை இயக்குநா் திலீப்குமாா், தேனி மாவட்ட வன அலுவலா் வித்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தேனியிலிருந்து சின்னமனூா், உத்தமபாளையம், கம்பம், கூடலூா் வழியாக குமுளி வரை நடைபெற்ற விழிப்புணா்வு வாகன ஊா்வலத்தில் வனத்துறையினா், ஊா்க்காவல் படையினா், பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்கள் பங்கேற்றனா்.
குமுளியில், தேசிய புலிகள் பாதுகாப்புக் குழுமத்தின் கொடி கேரளத்திலுள்ள பெரியாறு புலிகள் காப்பக வனத் துறை அலுவலா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.