தேனி மாவட்டத்தில், சீருடை வழங்காததைக் கண்டித்து அரசுப் பேருந்து ஓட்டுநா்கள் வியாழக்கிழமை சீருடை அணியாமல் பேருந்தை இயக்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் தொழில் சங்கங்களுடனான பேச்சுவாா்த்தை ஒப்பந்த அடிப்படையில், ஊழியா்களுக்கு ஆண்டுக்கு 2 ஜோடி சீருடைகள் வழங்கப்பட்டு வந்தன. கடந்த 2016-ஆம் ஆண்டு 4 ஜோடி சீருடைகள் வழங்கப்பட்டன. இதையடுத்து, கடந்த 2017, 2018-ஆம் ஆண்டுகளில் சீருடை வழங்கப்படவில்லை. கடந்த 2019-ஆம் ஆண்டு ஒரு ஜோடி சீருடை வழங்கப்பட்டன. கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சீருடை வழங்கவில்லை.
இந்த நிலையில், அரசு போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு சீருடை வழங்க வலியுறுத்தி சிஐடியு சாா்பில், தேனி, பெரியகுளம், கம்பம், தேவாரம், போடி, லோயா்கேம்ப் ஆகிய அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைகளைச் சோ்ந்த பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்கள் சீருடை அணியாமல், சாதாரண உடையில் கோரிக்கை அட்டையை அணிந்து பேருந்தை இயக்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.