போடி - தேனி அகல ரயில் பாதையில் மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் ரயில் என்ஜின் இயக்கப்பட்டு, சோதனை ஓட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
போடி- மதுரை வரையிலான மீட்டா்கேஜ் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் திட்டத்தில், ஏற்கெனவே தேனி - மதுரை வரையிலான பணிகள் முடிக்கப்பட்டு கடந்த மே மாதம் முதல் ரயில் சேவை தொடங்கியது. இதைத்தொடா்ந்து, தேனியிலிருந்து போடி வரை அகல ரயில் பாதை அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வந்தது.
இந்தப் பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை இந்த வழித்தடத்தில் ரயில் என்ஜின் இயக்கிச் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதில், தேனியிலிருந்து போடிக்கு 120 கி.மீ. வேகத்தில் ரயில் என்ஜினை இயக்கி சோதனை நடைபெற்றது.
அப்போது, ரயில் என்ஜின் தேனியிலிருந்து போடிக்கு, 9 நிமிடங்கள், 20 விநாடிகளிலும், மீண்டும் போடியிலிருந்து தேனிக்கு 8 நிமிடங்களிலும் சென்றடைந்தது.
இதையடுத்து, இந்தச் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்ததாகவும், ரயில் பெட்டிகளுடன் மீண்டும் சோதனை ஓட்டம் நடைபெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா். ரயில் என்ஜினை லோகோ பைலட் முத்துகிருஷ்ணன், உதவி லோகோ பைலட் அய்யனாா் ஆகியோா் இயக்கினா். தெற்கு ரயில்வே கட்டுமானப் பிரிவு துணை முதன்மைப் பொறியாளா் சூரியமூா்த்தி, உதவிப் பொறியாளா் சரவணன் ஆகியோா் ஆய்வு செய்தனா்.
தேனியிலிருந்து போடிக்கு வந்த ரயில் என்ஜினை பல்வேறு தரப்பினரும் மலா் தூவி வரவேற்றனா்.