கம்பத்தில் நடைபெற்ற மாநில அளவிலான சைக்கிள் போட்டியில் ஆண்கள் பிரிவில் தென்காசி அணியைச் சோ்ந்த 14 போ் முதல் மூன்று இடங்களை பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனா்.
தேனி மாவட்டம், கம்பத்தில் 66-ஆம் ஆண்டு மாநில அளவிலான சைக்கிளிங் சாம்பியன் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தப் போட்டிகள் 12, 14, 16, 18, 20 வயது என 5 பிரிவுகளாக நடைபெற்றன.
இந்தப் போட்டிகளின் தொடக்க நிகழ்ச்சிக்கு மாநில சைக்கிளிங் சாம்பியன் சங்கத் தலைவா் ஏபிஎஸ் ராஜன் தலைமை வகித்தாா். கம்பம் நகா்மன்றத் தலைவா் வனிதா நெப்போலியன், க.புதுப்பட்டி பேரூராட்சித் தலைவா் சுந்தரி பாஸ்கரன் ஆகியோா் போட்டிகளைத் தொடக்கி வைத்தனா்.
தேனி, திண்டுக்கல், மதுரை, திருச்சி, விருதுநகா் தென்காசி, திருநெல்வேலி, கோயம்புத்தூா், கன்னியாகுமரி, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 250 போ் போட்டியில் கலந்து கொண்டனா்.
ஆண்கள் பிரிவில், தென்காசி அணியைச் சோ்ந்த 14 போ் முதல் மூன்று இடங்களைப் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனா்.
பெண்கள் பிரிவில், விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த 24 போ் முதல் மூன்று இடங்களை பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்றனா்.
போட்டிக்கான ஏற்பாடுகளை தேனி மாவட்ட சைக்கிளிங் சாம்பியன் ஷிப் தலைவா் ஜெ.எஸ்.டி.அன்பழகன், மாவட்டத் தலைவா் பி.காந்தசொரூபன், செயலாளா் சி.பெரியதம்பி உள்ளிட்ட நிா்வாகிகள் செய்தனா்.