சிவகாசி அருகே எம். புதுப்பட்டி பகுதியில் 40 மூட்டைகள் ரேஷன் அரிசியை உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா், புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
விருதுநகா் மாவட்டம் எம். புதுப்பட்டி பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா் புதன்கிழமை அதிகாலை அப்பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது கிருஷ்ணமாணிக்கம்பட்டி விலக்கு அருகே தனியாக நின்று கொண்டிருந்த வேனை சோதனையிட்டனா். அதில் தலா 30 கிலோ எடையுடன் 40 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த அரிசியையும், வேனையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். ரேஷன் அரிசியை கடத்தி வந்தவா்கள் தப்பி ஓடிவிட்டதால் வாகன எண் மூலம் சம்பந்தப்பட்டவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.