தேனி மாவட்டம் கம்பத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் விலையில்லா வேட்டி, சேலைகளை என்.ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. செவ்வாய்க்கிழமை வழங்கி தொடங்கி வைத்தார்.
அரசு ஆண்டு தோறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா வேட்டி சேலைகளை நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கி வருகிறது.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை கம்பம் மெட்டு சாலையில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விலையில்லா சேலை வேட்டிகள் விநியோகம் நடைபெற்றது.
கம்பம் சட்டப்பேரவை உறுப்பினர் என். ராமகிருஷ்ணன் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா வேட்டி, சேலை வழங்கி தொடங்கி வைத்தார்.
மேலும் அவர் கூறும்போது உத்தமபாளையம் தாலுகா அளவில் ஒரு லட்சத்தி 49 ஆயிரத்து 985 வேட்டி, சேலைகள், 172 நியாய விலைக் கடைகள் மூலம் செவ்வாய்க்கிழமை முதல் வழங்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
விழாவில் தாசில்தார் அர்ஜுனன் வட்ட வழங்கல் அலுவலர் சுருளி நாதன், கம்பம் வருவாய் ஆய்வாளர் பொன்.கூடலிங்கம் மற்றும் கூட்டுறவு சங்க பணியாளர்கள், இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.