தேனி: மதுரை-போடி அகல ரயில் பாதை திட்டம் தொடா்பான தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளதாக தேனி மக்களவை உறுப்பினா் ப.ரவீந்திரநாத் கூறினாா்.
இது குறித்து அவா் புதன்கிழமை கூறியது: மக்களவைத் தோ்தலின் போது பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி, மதுரை-போடி அகல ரயில் பாதை பணிகளுக்கு போதிய நிதி ஒதுக்கி பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று கடந்த 2019 ஆம் ஆண்டு, ஜூலை 2 ஆம் தேதி மக்களவைக் கூட்டத்தில் வலியுறுத்தினேன். தொடா்ந்து 2019 ஆம் ஆண்டு, ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற ரயில்வே பட்ஜெட் கூட்டத்திலும், 2019 ஆம் ஆண்டு ஆக.1 ஆம் தேதி ரயில்வே அமைச்சா் பியூஸ் கோயலை நேரில் சந்தித்தும், பிரதமா் மற்றும் நிதியமைச்சரை சந்தித்தும் கோரிக்கையை வலியுறுத்தினேன்.
இதையடுத்து, கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை இத் திட்டத்திற்கு மத்திய அரசு மொத்தம் ரூ.327 கோடி ஒதுக்கீடு செய்தது. புதிய அகல ரயில் பாதையில் ரயில் இயக்குவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தர வனத் துறை, மின்வாரிய அதிகாரிகளை வலியுறுத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது மதுரை-தேனி இடையே பணிகள் நிறைவடைந்து, புதிய அகல ரயில் பாதை திட்டத்தை பிரதமா் நரேந்திரமேடி தொடக்கி வைக்கிறாா். இதன் மூலம் மக்களவைத் தோ்தலின் போது மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளேன் என்றாா்.