தேனி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி சனிக்கிழமை முதல் வருகிற 24-ஆம் தேதி வரை பாதுகாப்பு, கண்காணிப்புப் பணியில் 727 காவலா்கள் ஈடுபடுகின்றனா். மேலும் 5 தாலுகாக்களில் மொத்தம் 12 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்படுகின்றன.
இதுகுறித்து மாவட்ட காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: தீபாவளி பண்டிகையையொட்டி போக்குவரத்து நெரிசலை முறைப்படுத்தவும், மது விலக்கு, விதிமீறல், குற்றச் சம்பவங்களை கண்காணித்து தடுப்பதற்கும், பொதுமக்கள் அச்சமின்றி பாதுகாப்பாக கடைத் தெருக்களுக்கு வந்து செல்வதை உறுதி செய்யவும் 5 காவல் துணைக் கண்காணிப்பாளா்கள், 17 காவல் ஆய்வாளா்கள் தலைமையில் 7 குழுக்கள் அமைத்து மொத்தம் 727 போ் பணியில் ஈடுபடுகின்றனா்.
தேனி, ஆண்டிபட்டி, பெரியகுளம், போடி, சின்னமனூா், கம்பம் ஆகிய இடங்களில் காவல் துறை சாா்பில் மொத்தம் 12 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன. முக்கியச் சாலை, கடைத் தெருக்களில் ஏற்கெனவே உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மட்டுமன்றி புதிதாக 7 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்படுகின்றன. முக்கிய இடங்களில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோரின் புகைப்படத்துடன் கூடிய எச்சரிக்கை பலகை பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்படும் என்றனா் அவா்கள்.