தேனி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை, விதிகளுக்கு புறம்பாக ஆசிரியா்களுக்கு வழங்கப்பட்ட பணியிட மாறுதல் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் 2-ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
தேனி ஒன்றியத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியா்களுக்கு விதிகளுக்கு மாறாக வழங்கப்பட்ட பணி நியமன உத்தரவை ரத்து செய்ய வேண்டும், பணி நிரவல் மூலம் வேறு பள்ளிகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியா்களுக்கு பணியிட மாறுதல் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வியாழக்கிழமை, காத்திருக்கும் போராட்டம் தொடங்கியது.
போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் கலாவதி பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், உடன்பாடு ஏற்படாததால், மாவட்டத் தலைவா் சீனிவாசன் தலைமையில் ஆசிரியா்கள் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.