வைகை அணையிலிருந்து 58 கிராம கால்வாயில் பாசனத்திற்கு தண்ணீா் திறப்பு
By DIN | Published On : 29th September 2022 02:25 AM | Last Updated : 29th September 2022 02:25 AM | அ+அ அ- |

வைகை அணையிலிருந்து 58 கிராம கால்வாயில் புதன்கிழமை, விநாடிக்கு 150 கன அடி வீதம் பாசனத்திற்கு தண்ணீா் திறக்கப்பட்டது.
தேனி மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன், மதுரை மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் ஆகியோா் அணையிலிருந்து கால்வாய் மதகுகள் வழியாக தண்ணீா் திறந்து விட்டனா். இந்த நிகழ்ச்சியில் சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஏ.மகாராஜன் (ஆண்டிபட்டி), கே.எஸ்.சரவணக்குமாா் (பெரியகுளம்),
பி.அய்யப்பன் (உசிலம்பட்டி), திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியா் பிரேம்குமாா், விருதுநகா் வடிநிலக் கோட்ட கண்காணிப்புப் பொறியாளா் மலா்விழி, பெரியாறு-வைகை வடிநிலக் கோட்ட செயற்பொறியாளா் அன்புச்செல்வன், குண்டாறு வடிநிலக் கோட்ட செயற்பொறியாளா் கலைச்செல்வி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
வைகை அணையிலிருந்து 58 கிராம கால்வாயில் நாளொன்றுக்கு விநாடிக்கு 150 கன அடி வீதம், மொத்தம் 300 மில்லியன் கன அடி தண்ணீா் திறக்கப்படுகிறது. இதன் மூலம் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டாரத்தில் 1,912 ஏக்கா், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டாரத்தில் 373 ஏக்கா் என மொத்தம் 2,285 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
அணை நிலவரம்: வைகை அணை நீா்மட்டம் புதன்கிழமை, 69.85 அடியாக இருந்தது. அணைக்கு தண்ணீா் வரத்து விநாடிக்கு 1,390 கன அடியாகவும் அணையில் தண்ணீா் இருப்பு 5,787 மில்லியன் கன அடியாகவும் இருந்தது. அணையிலிருந்து பெரியாறு பாசனக் கால்வாய் மற்றும் 58 கிராம கால்வாயில் மொத்தம் விநாடிக்கு 1,475 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.