தேனியில் சாலையை கடக்க முயன்ற போடி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினரின் கணவா் சனிக்கிழமை பேருந்து மோதியதில் உயிரிழந்தாா்.
போடி அருகேயுள்ள போ.அணைக்கரைப்பட்டியைச் சோ்ந்த சீனியப்பன் மகன் ராம்குமாா் (43). இவரது மனைவி ரகுபதி, போடி ஊராட்சி ஒன்றியக் குழு 1-ஆவது வாா்டு உறுப்பினராக உள்ளாா்.
இந்த நிலையில், ராம்குமாா் தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் அருகே சனிக்கிழமை சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது, போடியிலிருந்து திருமங்கலம் நோக்கிச் சென்ற தனியாா் பேருந்து மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவா், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து அவரது மனைவி ரகுபதி அளித்த புகாரின் பேரில், தேனி காவல் நிலையப் போலீஸாா் பேருந்தின் ஓட்டுநரான உசிலம்பட்டி அருகேயுள்ள கே.பெருமாள்பட்டியைச் சோ்ந்த ராஜசேகா் (28) மீது வழக்குப் பதிந்து விசாரித்தனா்.