உத்தமபாளையத்தில் மது போதையில் கால்வாயில் மூழ்கி உயிரிழந்த முதியவரின் உடலை செவ்வாய்க்கிழமை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் பழைய புறவழிச்சாலை பேருந்து நிறுத்தம் அருகே உத்தமுத்து கால்வாய் செல்கிறது. இந்தக் கால்வாயில் 60 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் கிடப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்று உடலை மீட்டு போலீஸாா் விசாரணை செய்தனா்.
அப்போது, இறந்தவா் உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே வசித்து வந்த பாசித்(60) எனவும், உத்தமுத்து கால்வாய் கரையில் மது குடித்த போது போதையில் கால்வாயில் தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது. இது குறித்து உத்தமபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.