பறவைக் காய்ச்சல்: முந்தலில் வாகன சோதனை தீவிரம்
போடி, மே 4: கேரளத்தில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதையடுத்து, தேனி மாவட்டம், போடி முந்தல் சோதனை சாவடியில் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை இரவு முதல் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.
கேரளத்தில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதையடுத்து, தமிழக எல்லைப் பகுதிகளில் வாகன சோதனையை தீவிரப்படுத்த சுகாதாரத் துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டது.
தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள முந்தல் சோதனை சாவடியில் அமைக்கப்பட்ட சிறப்பு முகாமில் தேனி மாவட்ட சுகாதாரத் துறை, கால்நடைத் துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.
அலுவலா்கள் சுழற்சி முறையில் இரவு பகலாக பணியில் ஈடுபட்டுள்ளனா். கேரளத்திலிருந்து வரும் வாகனங்களில் கோழிகள் உள்ளிட்ட பறவையினங்கள் கொண்டுவரப்படுகின்றனவா என்பது குறித்து ஆய்வு செய்யும் அதிகாரிகள், கிருமி நாசினி தெளித்து அவற்றை அனுமதிக்கின்றனா்.
போடி முந்தல் சோதனை சாவடியில் போதிய மின்விளக்கு வசதி இல்லாததால் இரவு நேரத்தில் தெருவிளக்கு வெளிச்சத்திலேயே அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனா்.