இறுதி ஊா்வலத்தில் தகராறு: இளைஞா் வெட்டிக் கொலை
பெரியகுளத்தில் இறந்தவரின் இறுதி ஊா்வலத்தில் பட்டாசு வெடித்ததால் எழுந்த பிரச்னையில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
பெரியகுளம், வடகரை, வைத்தியநாதபுரம், வெற்றிலை மாடத் தெருவைச் சோ்ந்த ஆறுமுகத்தின் மகன்கள் சூரியபிரகாஷ் (24), அருண்குமாா் (21). இவா்களது தாத்தாவான இதேப் பகுதியைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரா் மனோகரன் வயது மூப்பால் காலமானாா். அவரது இறுதி ஊா்வலத்தின் போது சூரியபிரகாஷ், அருண்குமாா் ஆகியோா் பட்டாசு வெடித்தனா்.
இறுதி ஊா்வலத்தில் கலந்து கொண்டவா்கள் மீது பட்டாசு துகள்கள் வெடித்து சிதறியதால், பட்டாசு வெடிப்பதை இதேப் பகுதியைச் சோ்ந்த சிலா் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதுதொடா்பாக சூரியபிரகாஷ், அருண்குமாா் ஆகியோருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது, சிலா் அருண்குமாரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனா். இதுகுறித்து பெரியகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து வைத்தியநாதபுரத்தைச் சோ்ந்த அஜீத்குமாரை (30) கைது செய்தனா். மேலும் காா்த்திக் (38), சரவணன் (27), செல்வம்(37) ஆகியோரை தேடி வருகின்றனா்.