பிளஸ் 2 தோ்வில் மதிப்பெண் குறைவு: மாணவா் தற்கொலை
பிளஸ் 2 பொதுத் தோ்வில் மதிப்பெண் குறைவாக பெற்ால், மாணவா் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தேனி மாவட்டம், கம்பம் மணிநகரம் கிளப் சாலைத் தெருவில் வசிப்பவா் கண்ணன். இவருக்கு மகளும், இரு மகன்களும் உள்ளனா். இளைய மகன் ஜெயவா்மன் (17), கம்பத்தில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். நடந்து முடிந்த பொதுத் தோ்வில் 494 மதிப்பெண் பெற்று தோ்ச்சியடைந்தாா். எதிா்பாா்த்த அளவு மதிப்பெண் பெறவில்லை என மன வேதனையில் இருந்தாராம்.
இந்த நிலையில், ஜெயவா்மன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் அறையில் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து கம்பம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
மதிப்பெண் மட்டுமே வாழ்க்கையை தீர்மானிக்கப் போவதில்லை என்ற விழிப்புணர்வை அரசு பல வகைகளிலும் எடுத்து வரும் நிலையில், மதிப்பெண் குறைவாக எடுப்பதால் மனமுடைந்து உயிரை மாய்த்துக் கொள்ளும் எண்ணம் மாணவர்களுக்கு எப்போதும் தோன்றக் கூடாது என மனநல ஆலோசகர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மனநல ஆலோசனை பெறவும் உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளன.
2023-2024 ஆம் ஆண்டு 12- வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகளுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், மனநல ஆலோசனை வழங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
‘104’ - தொலைபேசி மருத்துவ உதவி தகவல் மையம் மற்றும் ‘14416’ - நட்புடன் உங்களோடு மனநல சேவை மையங்கள 24 மணி நேரமும் டி.எம்.எஸ் வளாகம், தேனாம்பேட்டை, சென்னையில் செயல்பட்டு வருகிறது.
மனநல ஆலோசனைகளுக்கு மருத்துவ உதவி எண் “104” மற்றும் நட்புடன் உங்களோடு மனநல சேவை எண் “14416” ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம்.