விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில், இவரது அண்ணன் மகன்கள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து, மாவட்டக் கூடுதல் அமர்வு நீதிபதி பரிமளா திங்கள்கிழமை உத்தரவிட்டார்.
திருச்சுழி அருகே உள்ள தமிழ்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி மருதன். இவரது அண்ணன் இருளன். இவர்கள் இருவருக்கும் கிணற்றிலிருந்து விவசாய நிலத்துக்கு தண்ணீர் எடுப்பதில் தகராறு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், மருதன் கடந்த 28.8.2009 இல் தனது மகன் மதுரைவீரன், மருமகள் நாகஜோதியுடன் தங்களது நிலத்தில் விவசாயப் பணிகளை மேற்கொள்ளச் சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த இருளன், இவரது மகன்களான மதுரைவீரன் (49), அமிர்தராஜ் (35), பாக்கியராஜ் (34) ஆகியோர், மருதனை வழிமறித்து ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். அதில், மருதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து திருச்சுழி போலீஸார் வழக்குப் பதிந்து, இருளன் மற்றும் அவரது மகன்களை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு, விருதுநகரில் உள்ள மாவட்டக் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தபோது, இருளன் இறந்துவிட்டார்.
இந்த விசாரணையின் முடிவில் நீதிபதி பரிமளா திங்கள்கிழமை அளித்த தீர்ப்பில், இருளனின் மகன்களான மதுரைவீரன், அமிர்தராஜ், பாக்கியராஜ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், ஒவ்வொருவருக்கும் தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அதையடுத்து, இம்மூவரையும் போலீஸார் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.