கோடை உழவு செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
By DIN | Published On : 17th April 2019 06:23 AM | Last Updated : 17th April 2019 06:23 AM | அ+அ அ- |

கோடை உழவு செய்ய விவசாயிகளுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர், வேளாண்மை உதவி இயக்குநர் ல.முத்துலட்சுமி ஆலோசனைகள் வழங்கியுள்ளார்.
இது குறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோடை உழவு கோடி நன்மை என்ற பழமொழிக்கேற்ப ஆண்டுக்கொருமுறை வரும் ஓரிரு மாத கோடை கால இடைவெளியில் (ஏப்ரல்-மே மாதங்களில்) சாகுபடி நிலத்தை தரிசாக விடாமல் சட்டி கலப்பைக் கொண்டு உழுவதையே கோடை உழவு என்கிறோம். கோடை உழவில் ஆழமாக உழுது மேல்மண்ணை கீழாகவும் கீழ் மண்ணை மேலாகவும் புரட்டிவிடுவதால் மண்ணின் நாள்பட்ட இறுக்கம் தளர்த்தப்பட்டு மண் இலகுவாகிறது. இதனால் மண்ணில் காற்றோட்டம் அதிகரிக்கிறது. மண்ணின் நீர்பிடிப்புத் தன்மை அதிகரிக்கிறது. இதனால் களைகள் அழிக்கப்படுவதோடு அவையே மக்கி பயிர்களுக்கு உரமாகி நிலத்திற்கு வளம் சேர்க்கிறது. மேற்கண்ட செயல்களால் சாகுபடி பயிர்களின் வேர் வளர்ச்சி அதிகரித்து அதிக மற்றும் தரமான விளைச்சல் கிடைக்கிறது. கோடை உழவினால் மண்ணில் வாழும் பயிர்களில் பல்வேறு நோய்கள் உருவாகுவதற்கு காரணமான பூசனங்களும், பூசன வித்துக்களும் செலவின்றி அழிக்கப்படுகின்றன. எனவே கோடை உழவு செய்து பயன்பெறுமாறு வேளாண்மை உதவி இயக்குநர் கேட்டுக் கொண்டுள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...