விருதுநகர் மாவட்டத்தில் 21 சமையலர் காலி பணியிடம்: விண்ணப்பிக்க செப்.16 கடைசி
By DIN | Published On : 28th August 2019 09:06 AM | Last Updated : 28th August 2019 09:06 AM | அ+அ அ- |

விருதுநகர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அரசு விடுதிகளில் காலியாக உள்ள 21 சமையலர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள், செப்டம்பர் 16 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செவ்வாய்க்கிழமை மேலும் கூறியதாவது: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு விடுதிகளில் ஆண்- 12, பெண்- 9 என மொத்தம் 21 சமையலருக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்கள் அனைத்தும் நேர்காணல் மற்றும் இன சுழற்சி அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கு, செப்டம்பர் 16-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். மேலும், சைவ, அசைவ உணவுகள் தரமானதாகவும், சுவையானதாகவும் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
இதற்கான வயது வரம்பு 1.7.2019 அன்று ஆதி திராவிடர்கள் 18 முதல் 35 வயதுக்குள்ளும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் - 18 முதல் 32 வயதுக்குள்ளும், இதர பிரிவினர் 18 முதல் 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
அதேபோல், விண்ணப்பத்துடன் கல்வித் தகுதி சான்றிதழ் மற்றும் வயது, சாதி சான்றிதழ், முன்னுரிமை சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் இருப்பிடச் சான்று, வேலைவாய்ப்பக முன்பதிவு, சமையல் பணியில் முன்அனுபவச் சான்றிதழ் ஆகியவற்றின் நகல்கள் இணைக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.