சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி தமிழ்த்துறை சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற கல்லூரிகளுக்கிடையிலான தனித்திறன் போட்டியில் சிவகாசி அரசன் கணேசன் கல்வியியல் கல்லூரி முதலிடம் பெற்றது.
இப்போட்டியில், விருதுநகர் வி.வி.வி.மகளிர் கல்லூரி, சிவகாசி எஸ்.எப்.ஆர்.மகளிர் கல்லூரி, மதுரை லேடிடோக் கல்லூரி, தூத்துக்குடி ஏ.பி.சி.கல்லூரி, ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி உள்ளிட்ட 16 கல்லூரிகளைச் சேர்ந்த 220 மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் பேச்சு, கவிதை, சிறுகதை, நாட்டுப்புற நடனம் உள்ளிட்ட 8 வகையான போட்டிகள் நடைபெற்றன. இதில் அதிகப் புள்ளிகள் பெற்று சிவகாசி அரசன் கணேசன் கல்வியியல் கல்லூரியினர் முதலிடம் பெற்றனர்.
போட்டியில் முதலிடம் பெற்றவர்களுக்கு, அய்யநாடார் ஜானகி அம்மாள் நினைவுக் கோப்பையை முதல்வர் செ.அசோக் வழங்கினார். மேலும் இரண்டாமிடம், மூன்றாமிடம் பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
முன்னதாக முதுகலைதமிழ்த்துறைத் தலைவர் க.சிவனேசன் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் சோ.முத்தமிழ் செல்வன் நன்றி கூறினார்.