ராஜபாளையத்தில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை
By DIN | Published On : 30th March 2019 07:32 AM | Last Updated : 30th March 2019 07:32 AM | அ+அ அ- |

காதல் திருமணம் செய்த கணவர் தன்னுடன் வர மறுத்ததால், ராஜபாளையத்தில் வியாழக்கிழமை இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ராஜபாளையம் சிங்கராஜாக்கோட்டை தெருவைச் சேர்ந்தவர் வேலுச்சாமி மகள் விக்னேஸ்வரி (26). இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு தனியார் நூற்பாலையில் தன்னுடன் வேலை பார்த்த தேவிபட்டினத்தைச் சேர்ந்த குருசாமி மகன் மாரிமுத்துவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 5 வயதில் கார்த்தீஸ்வரன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சில மாதங்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் வேலுச்சாமி இருவரையும் சமாதானம் செய்து தனது வீட்டின் அருகிலேயே வாடகைக்கு வீடு எடுத்து தங்க வைத்துள்ளார். இந்நிலையில் விக்னேஸ்வரியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கணவர் மாரிமுத்து , இருக்கன்குடி சென்று விட்டார்.
இதனைத்தொடர்ந்து ராஜபாளையம் தனியார் மில்லில் வேலை செய்து வந்த மாரிமுத்துவை, வியாழக்கிழமை சந்தித்து தன்னுடன் வருமாறு விக்னேஸ்வரி வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
ஆனால் மாரிமுத்து வர மறுத்ததால் மனமுடைந்த விக்னேஸ்வரி, தான் கொண்டு வந்திருந்த விஷத்தை குடித்து மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அப்பகுதியில் உள்ளவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுதொடர்பாக வேலுச்சாமி அளித்த புகாரின் பேரில் ராஜபாளையம் தெற்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...