சிவகாசி அருகே கழிவு பட்டாசை கிளறியபோது தீ விபத்து பள்ளி மாணவர்கள் 3 பேர் காயம்
By DIN | Published On : 05th May 2019 03:02 AM | Last Updated : 05th May 2019 03:02 AM | அ+அ அ- |

சிவகாசி அருகே சனிக்கிழமை கழிவு பட்டாசை கிளறியபோது ஏற்பட்ட தீ விபத்தில் பள்ளி மாணவர்கள் 3 பேர் காயமடைந்தனர்.
சிவகாசி அருகே உள்ள பாரைப்பட்டியைச் சேர்ந்த செல்வம் மகன் சுரேஷ்குமார் (13). 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தம்பி செல்லகண்ணன் (10), 5 ஆம் வகுப்பு படித்துவருகிறார். சிவகாசி சாமிபுரம் காலனியைச் சேர்ந்த வைரபிரகாசம் மகன் விஷால் (11), 5 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், விஷால் பாரைப்பட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு மூன்று சிறுவர்களும் அப்பகுதியில் ஓடையில் எரிக்கப்பட்டிருந்த கழிவு பட்டாசுகளை விளையாட்டாக கம்பால் கிளறியுள்ளனர்.
அப்போது தீப்பற்றியதில் மூவரும் பலத்த தீகாயமடைந்தனர். மூவரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து சிவகாசி கிழக்குப் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.