புரட்டாசி 3 ஆம் சனி: பெருமாள் கோயில்களில் பக்தா்கள் வழிபாடு
By DIN | Published On : 06th October 2019 04:19 AM | Last Updated : 06th October 2019 04:19 AM | அ+அ அ- |

விருதுநகா் ராமா் கோயில் வளாகத்தில் சனிக்கிழமை வெற்றிலை அலங்காரத்தில் காட்சி தரும் ஆஞ்சநேயா் சுவாமி.
புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோயில்களில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் சனி வார விழா உற்சவம் நடைபெறும். அதன்படி, நிகழாண்டு புரட்டாசி மாத 3 ஆம் சனிக்கிழமையை முன்னிட்டு அதிகாலையில் ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. அதை தொடா்ந்து, அதிகாலை காலசாந்தி பூஜை கள் நடைபெற்றன. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். திருப்பதி கோயிலுக்கு செல்ல முடியாதவா்கள், திருவண்ணாமலை கோயிலுக்கு வந்து தரிசனம் செய்து, ஆடு, மாடுகள் மற்றும் விவசாய பொருள்கள், தானியங்களை ஸ்ரீனிவாச பெருமாளுக்கு காணிக்கையாக வழங்குவா்.
இதனால், நாட்டு மக்களின் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்ததால், சிறப்பு பேருந்துகள், குடிநீா், மருத்துவம் மற்றும் அன்னதான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மேலும், 700 க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.
இவ்விழாவை முன்னிட்டு, 30 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் செய்திருந்தது.
ராமா் கோயில்: அதேபோல், விருதுநகா் ராமா் கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு சனிக்கிழமை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும், ஆஞ்சநேயா் சுவாமி வெற்றிலை அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
இதே போன்று மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்கள் அனைத்திலும் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...