அண்ணா பல்கலைக் கழக மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டியில் கள்ளிக்குடி காமராஜ் பொறியியல் கல்லூரி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
மதுரை மாவட்டம் கள்ளிக்குடியில் உள்ள காமராஜ் பொறியியல் கல்லூரியில், அண்ணா பல்கலைக் கழகத்திற்கு உள்பட்ட 17 ஆவது மண்டலத்திற்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில், 24 பொறியியல் கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியானது, பல்வேறு சுற்றுகளாக நடைபெற்றது. இறுதிப் போட்டியில் என்பிஆர் நத்தம் பொறியியல் கல்லூரியை காமராஜ் பொறியியல் கல்லூரி வென்று முதலிடம் பெற்றது. அதேபோல், மற்றொரு போட்டியில் திண்டுக்கல் அண்ணா பல்கலைக்கழக அணியை, பிஎஸ்என்ஏ பொறியியல் கல்லூரி வென்று மூன்றாவது இடம் பெற்றது. என்பிஆர் நத்தம் பொறியியல் கல்லூரி இரண்டாம் இடத்தையும், திண்டுக்கல் அண்ணா பல்கலைக்கழக அணி நான்காம் இடத்தையும் பெற்றன.
வெற்றி பெற்ற கிரிக்கெட் அணிகளுக்கு நினைவு பரிசு மற்றும் சான்றிழ்களை காமராஜ் பொறியியல் கல்லூரி செயலர் முருகன், தலைவர் ராஜா, பொருளாளர் பெரியசாமி உள்ளிட்ட கல்லூரி நிர்வாகிகள் சனிக்கிழமை வழங்கினர்.