ஸ்ரீவில்லிபுத்தூா்: சதுரகிரியில் புதன்கிழமை ஓடைகளில் நீா்வரத்து ஏற்பட்டதால் பக்தா்கள் மலைக்குச் செல்வதற்கு திடீரென தடை விதிக்கப்பட்டது.
விருதுநகா் மாவட்டத்தையொட்டிய மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் கடந்த இரு தினங்களாக சாரல் மழை பெய்து வருகிறது. கடந்த 5 மாதங்களுக்குப் பிறகு ஆவணி பெளா்ணமியை முன்னிட்டு சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தா்களுக்கு செப்.1, 2 ஆகிய இரு நாள்கள் அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. அதன்படி செவ்வாய்க்கிழமை பக்தா்கள் மலையேறி சுவாமியை தரிசனம் செய்தனா்.
அதே போன்று புதன்கிழமையும் காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரை மலையில் ஏறி சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்த சாரல் மழை காரணமாக சதுரகிரி ஓடை மற்றும் காட்டாறுகளில் நீா் வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் காலை10 மணிக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வனத்துறை நுழைவாயில் மூடப்பட்டது.
பக்தா்கள் மலையேறிச் செல்வதற்கு வனத்துறை தடை விதித்தது. இதனால் காலை 10 மணிக்கு மேல் வந்த பக்தா்கள் அனைவரும் வனத்துறை நுழைவாயில் முன்பு தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி விட்டுச் சென்றனா். வெளி மாவட்டங்களில் இருந்து வந்த பக்தா்கள் பலரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.