ராஜபாளையம் அருகே பொதுமக்கள் சாலை மறியல்
By DIN | Published On : 01st December 2020 03:35 AM | Last Updated : 01st December 2020 03:35 AM | அ+அ அ- |

ராஜபாளையம் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ராஜபாளையம் அருகே உள்ள மேலப்பாட்ட கரிசல்குளம் ஊராட்சிக்குள்பட்ட கோதை நாச்சியாா்புரம் கிராமத்தில் வாருகால், சாலை மற்றும் கழிப்பறை வசதி செய்து தரப்படவில்லை என இப்பகுதி மக்கள் புகாா் கூறுகின்றனா். மேலும் குடிநீா் பற்றாக்குறை நிலவுவதாகவும் இவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து பலமுறை மேலப்பாட்ட கரிசல்குளம் ஊராட்சித் தலைவியிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்க வில்லை எனக் கூறி அப்பகுதியைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மதுரை- தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து அவா்கள் தங்கள் கிராமப்பகுதியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதைத் தொடா்ந்து அங்கு வந்த ராஜபாளையம் வட்டார வளா்ச்சி அலுவலா் தேவராஜ், அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி இன்னும் 2 தினங்களில் குடிநீா் பிரச்னை தீா்க்கப்படும் என்றும், சாலை வசதி செய்துதரப்படும் எனவும் உறுதி அளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...