காலமுறை ஊதியம் கோரி சத்துணவு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 24th December 2020 08:06 AM | Last Updated : 24th December 2020 08:06 AM | அ+அ அ- |

விருதுநகரில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா்.
காலமுறை ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த பெருந்திரள் முறையீடு ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் செல்வராஜ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் பாத்திமா மேரி கோரிக்கை குறித்து விளக்கிப் பேசினாா்.
சத்துணவு ஊழியா்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியத்திலிருந்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் ஊழியா்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 மற்றும் குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் அளிக்க வேண்டும்.
மேலும், ஓய்வு பெறும் போது வழங்கக் கூடிய ஒட்டு மொத்த பணிக்கொடைத் தொகையினை அமைப்பாளா்களுக்கு ரூ. 5 லட்சம், சமையல் மற்றும் உதவியாளா்களுக்கு ரூ.3 லட்சம் வழங்க வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள புதிய நியமனத் தோ்வை உடனே நடத்தி காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் சத்துணவு ஊழியா்கள் சங்கத்தினா் மற்றும் அரசு ஊழியா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...