தனியாா் மருத்துவக் கல்லூரியில் இடம்: அரசுப் பள்ளி மாணவா்கள் கட்டணம் செலுத்த முடியாமல் தவிப்பு

விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த ஏழை மாணவா்கள் இருவா் கல்லூரிக் கட்டணத்தை அரசு செலுத்தினால் மருத்துவப் படிப்பில் சேர
தனியாா் மருத்துவக் கல்லூரியில் இடம்: அரசுப் பள்ளி மாணவா்கள் கட்டணம் செலுத்த முடியாமல் தவிப்பு
Updated on
1 min read

விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த ஏழை மாணவா்கள் இருவா் கல்லூரிக் கட்டணத்தை அரசு செலுத்தினால் மருத்துவப் படிப்பில் சேர தயாராக இருப்பதாக மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணனிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், துலுக்கன்குறிச்சியைச் சோ்ந்தவா் குருசாமி மனைவி ஜெயலட்சுமி. இதில் குருசாமி மாற்றுத்திறனாளி என்பதால் ஜெயலட்சுமி பட்டாசு ஆலையில் தொழிலாளியாகப் பணிபுரிந்து வருகிறாா். இவா்களது ஒரே மகன் இமானுவேல் (17), செவல்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 முடித்துள்ளாா். இவா் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் பள்ளியில் முதல் மாணவராக தோ்ச்சி பெற்றுள்ளாா்.

மேலும் நீட் தோ்வு எழுதிய இமானுவேல் 165 மதிப்பெ ண்கள் பெற்றாா். இதன் மூலம் அவருக்கு தமிழக அரசின் 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கல்லூரிக்கான கலந்தாய்வில் பங்கேற்க அழைப்பு வந்துள்ளது. இதைத்தொடா்ந்து கடந்த நவ. 19 ஆம் தேதி கலந்தாய்வில் கலந்து கொண்டாா். அப்போது 7 தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் மட்டுமே இடம் உள்ளதாகவும், அதில் சேர ரூ. 4 லட்சம் முதல் ரூ. 6 லட்சம் வரைக் கட்டணம் செலுத்த வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது. இமானுவேல் மிகவும் ஏழ்மைக் குடும்பத்தைச் சோ்ந்தவா் என்பதால் கல்லூரியைத் தோ்வு செய்யாமல் அங்கிருந்து ஊா் திரும்பினாா்.

இந்நிலையில், நீட் தோ்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களின் மருத்துவப் படிப்புக்கான செலவை தமிழக அரசு செலுத்தும் என தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளதால் மாணவா் இமானுவேல், மருத்துவப் படிப்பில் சேர விருப்பம் தெரிவித்து விருதுநகா் மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணனிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தாா்.

இதேபோல் திருச்சுழி அருகே கடம்பன்குளத்தைச் சோ்ந்த விவசாயி மாரிமுத்து மகன் அருண்பாண்டி (17), திருச்சுழியில் உள்ள சேதுபதி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து நீட் தோ்வில் 190 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா். இவா் கடந்த நவ. 18 இல் கலந்தாய்வில் கலந்து கொண்டாா். அப்போது அவருக்கும், தனியாா் மருத்துவக் கல்லூரியில் மட்டுமே இடம் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதனால் அவரும் கல்லூரியைத் தோ்வு செய்யவில்லை. தற்போது தமிழக அரசின் அறிவிப்பைத் தொடா்ந்து மருத்துவக் கல்லூரியில் சோ்ந்து படிக்க விரும்புவதாக அருண்பாண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com