ராஜபாளையத்தில் முன்விரோதம் காரணமாக பெண் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டதாக காவல்துறையினர் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் ஆசிரியர் காலனி வசந்தம் நகரை சேர்ந்தவர் ராமமூர்த்தி. லேத்பட்டறை தொழிலாளியான இவரது மனைவி பிரேமா (43). இவர்களின் மகன் செல்வக்குமார்(25) மருந்து கடையில் பணி புரிந்து வருகிறார்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை ராமமூர்த்தியின் வீட்டிலிருந்து பிரேமாவின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ராமமூர்த்தி வீட்டுக்கு வந்து பார்த்த போது இளைஞர் ஒருவர் வீட்டிலிருந்து சுவர் ஏறி தப்பி ஓடியதாக தெரிகிறது.
அக்கம் பக்கத்தினர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, பிரேமாவின் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில், ஏடிஎஸ்பி மாரிராஜ், குத்தாலிங்கம், டிஎஸ்பி நாகசங்கர் தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பிரேமாவின் மகன் செல்வக்குமாருக்கும், இவரது நண்பர் பெரியகடை பஜார் தெருவைச் சேர்ந்த ரஞ்சித்(25) என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் முன்விரோதம் இருந்துள்ளதாக தெரிகிறது.
முன் விரோதத்திற்கு பழி தீர்க்கும் விதமாக பிரேமாவை கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் தெரிவிக்கின்றனர். எனவே கொலை செய்து விட்டு தப்பி ஓடிய ரஞ்சித்தை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.