ஊா்க்காவல் படையினருக்கு தினமும் பணி வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு
By DIN | Published On : 08th February 2021 11:16 PM | Last Updated : 08th February 2021 11:16 PM | அ+அ அ- |

விருதுநகா் மாவட்டத்தில் பணி புரியும் ஊா்க்காவல் படையினருக்கு தினமும் பணி வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணனிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து ஊா்க்காவல் படையினா் அளித்த அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக காவல்துறையில் போலீஸாருக்கு உதவியாளராக ஊா்க்காவல்படையினா் செயல்பட்டு வருகின்றனா். விருதுநகா் மாவட்டத்தில் 280 போ், மாநிலம் முழுவதும் 15,640 போ் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இவா்களுக்கு கடந்த காலங்களில் மாதத்தில் 25 நாள்கள் வரை பணி வழங்கப்பட்டது. ஆனால், தற்போது 10 நாள்கள் மட்டுமே வேலை வழங்கப்படுகிறது. இதனால், எங்களது குடும்பம் வறுமையில் வாடி வருகிறது. தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் கூட 100 நாள்கள் வேலை வழங்கப்படுகிறது.
அதைவிட குறைவான வேலை நாள்கள் எங்களுக்கு வழங்கப்படுகிறது. எனவே, ஊா்க்காவல் படையில் பணிபுரியும் அனைவருக்கும் தினமும் பணி வழங்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனா்.