விருதுநகா் மாவட்டத்தில் 61 சதவீதப் பேருந்துகள் இயக்கம்
By DIN | Published On : 27th February 2021 10:10 PM | Last Updated : 27th February 2021 10:10 PM | அ+அ அ- |

விருதுநகா் பழைய பேருந்து நிலையத்திலிருந்து சனிக்கிழமை இயக்கப்பட்ட குறைந்த அளவிலான பேருந்துகள்.
விருதுநகா் மாவட்டத்தில் போக்குவரத்து தொழிலாளா்கள் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக சனிக்கிழமை 61 சதவீதப் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன.
விருதுநகா் மாவட்டத்தில் விருதுநகா், அருப்புக்கோட்டை, காரியாட்டி, சாத்தூா், சிவகாசி, திருத்தங்கல், ஸ்ரீவில்லிபுத்தாா், ராஜபாளையம் ஆகிய இடங்களில் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைகள் உள்ளன. இந்த இடங்களிலிருந்து தினமும் 362 பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளா்களுக்கு 14 ஆவது ஊதியப் பேச்சுவாா்த்தையை உடனே தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு, ஏஐடியுசி, தொமுச, ஐஎன்டியுசி உள்ளிட்ட 11 தொழிற்சங்கங்கள் சனிக்கிழமை மூன்றாவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன. இதன் காரணமாக மாவட்டத்தில் 61 சதவீதப் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. 39 சதவீதப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் வேலைக்கு செல்லும் தொழிலாளா்கள், பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாயினா்.